சம்பள சபைகள் கட்டளை சட்டத்தின் நோக்கம் யாது?
கைத்தொழில்கள் (Industrial) மற்றும் சேவைகளின், தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் படிகளை ஏற்பாடு செய்தலும், சம்பள சபைகளை (Salary Board) அமைத்தலும், அது தொடர்பான வேறு விடயங்களை வழங்குதலும் ஆகும்.
சம்பள சபைகள் கட்டளை சட்டம் யாருக்கு ஏற்புடையதாகும்?
இலங்கையில் தனியார் துறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஏற்புடையதாகும். (Private Sector)
சம்பள சபைகள் கட்டளை சட்டம் யாருக்கு ஏற்புடையதாகாது?
தொழில் நுட்பப் பயிற்சியினை அளிக்கும் சிறுவர் குற்றவியல், பார்வையற்றவர் காது கேளாதோர், வாய்பேசாதோர் சார்பாக மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு அல்லது தாபனங்களுக்கு.
சம்பள சபைகள் கட்டளை சட்டம் பிரதானமாக மூன்று பகுதிகளை உள்ளடக்கியுள்ளது அவை எவை?
முதலாம் பகுதி – சகல சேவைக்கும், தொழிலுக்கும் பொருந்தும் பொதுத் தீர்மானங்களையும்,
இரண்டாம் பகுதி – குறிப்பிடப்பட்ட சில தொழில்கள் தொடர்பாகவும்,
மூன்றாம் பகுதி சட்ட அமுலாக்கல் தொடர்பான விதிகளையும் உள்ளடக்குகின்றன
சம்பள சபைகள் கட்டளை சட்டத்தின் முதலாம் பகுதியில் குறிப்பிட்டதன்படி தொழிலாளர் சம்பளத்திலிருந்து கழிவீடு செய்யப்படக்கூடிய வீதம் எவ்வளவு?
ஒரே தடவையில் சம்பளத்திலிருந்து அறவிடக்கூடியது சம்பளத்தின் முழுத் தொகையின் 50% என்பதுடன் முன் அனுமதி பெற்ற நிறுவனங்களில் 75% வரையிலான அறவீடுகளைச் செய்து கொள்ளலாம். இருந்தும் இறைவரிச் சட்டத்தின் கீழ் அல்லது நீதிமன்றத் தீர்ப்பின்படி செய்யப்படும் அறவீடுகள் மேற்குறிப்பிட்ட எல்லையினை மீற முடியும்.
சம்பள சபைகள் கட்டளை சட்டத்தின் படி அதிகாரமளிக்கப்பட்ட அறவீடுகள் எவை?
அ) சம்பள முற்பணம்
ஆ) தொழில்தருநர் அல்லாத வேறொருவருக்கு வேலையாளரின் கோரிக்கைக்கு அமைய வழங்கப்பட வேண்டிய பணம்.
இ) ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்துக்கு வேலையாளரின் வேண்டுகோளுக்கு அமைய வழங்கப்பட வேண்டிய பணம்.
ஈ) தொழில் தருநரால் வழங்கப்பட்ட வீட்டுவசதிக்கான வாடகைப் பணம்
உ) ஆணையாளரின் மூலம் அனுமதிக்கப்பட்ட துணிச்சலவைக்கான கூலி
ஊ) தொழில் நிலையத்தில் விற்பனை செய்யப்பட்ட பொருளின் கட்டணம்
ஐ) அனுமதிக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் தவணைக்கட்டணமும் அதற்கான வட்டியும். (Loan Installment and Interest)
ஒ) குற்றப்பணம் (ஒரே தடவையில் சம்பளத்தில், 5%க்கு உட்பட்ட)
சம்பள சபைகள் கட்டளை சட்டத்தின் படி தண்டனை வழங்கக் கூடிய தவறுகள் எவை?
- ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களின்றி வேலைக்கு வராமை
- ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணமின்றி சேவைக்கு தாமதமாக வருகை
- கவனக்குறைவால் ஏற்படும் சொத்து சேதங்கள்.
- வேலை நேரத்தில் நித்திரை செய்தல்
- தமது கடமை தொடர்பான சட்டப்படியான கட்டளைகளை மீறுதல்
- களவு, பொய், மோசடி
- கடமை நேரத்தில் மதுபோதையில் இருத்தல்
- நுகர்வோருக்கு சிரமம் கொடுத்தல்
- உண்மையற்ற சுகவீனம்
- அனுமதியன்றி நிறுவனத்தில் அறிவித்தல், சுவரொட்டிகளை விநியோகித்தல்,
- தடைசெய்யப்பட்ட பிரதேசத்தினுள் புகைபிடித்தல்.
சம்பள சபைகள் கட்டளை சட்டத்தின் படி தொழிலாளருக்கு சம்பளம் வழங்க வேண்டிய காலம் எது?
- கிழமைக்கு ஒரு முறை செலுத்துமிடத்து, கிழமை முடிவடைந்த 3 நாட்களுக்குள்
- 2 வாரங்களுக்கு ஒருமுறை எனின், 2 வாரங்கள் முடிவடைந்து 5 நாட்களுக்குள்
- மாதம் ஒருமுறையானால், மாதம் முடிந்து 10 நாட்கள் முடிவடையுமுன்
- தொழிலாளி வராததனால் உரிய காலத்தில் சம்பளம் கொடுக்க முடியாதவிடத்து அவர் வந்தவுடன் வழங்க வேண்டும்.
- தொழிலாளியின் சேவையை முடிவுறுத்தும்போது, 2 வேலைநாட்களுக்குள் சம்பளம் வழங்க வேண்டும்.
சம்பள சபைகள் கட்டளை சட்டத்தின் படி தொழிலாளர் சம்பள ஏடு எவ்வாறு பேணப்பட வேண்டும்?
அ) சட்டத்தின் மூன்றாம் பிரிவில் குறிப்பிடும் விபரத்தைக் கொண்ட சம்பள ஏடொன்று தொழில்தருநரால் பேணப்படல் வேண்டும்
ஆ) அதில் குறித்துரைக்கப்பட்ட சம்பளக் கால எல்லை முடிவடைந்து 6 வருடங்கள் முடிவடையும் வரை அந்தச் சம்பள ஏடு பாதுகாக்கப்படல் வேண்டும்.
இ) அதிகாரம்பெற்ற அலுவலரினால் பரிசீலனைக்கு கோரும் பட்சத்தில் அந்த சம்பள ஏடு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.
பௌர்ணமி தினம் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் எவ்வாறு வழங்கப்படும்? (Poya Days)
இந்த நாள் தொழிலாளர்களுக்கு விடுமுறைதினம் ஆகும். இன் நாளில் வேலை செய்ய வேண்டியேற்படின் வேலை செய்யும் காலத்துக்கு வழமையான நாளொன்றிற்கு வழங்கும் சம்பளத்தைப் போன்ற 1 1/2 மடங்கு சம்பளம் வழங்குதல் வேண்டும்.
தொழிலாளிக்கு சம்பளம் வழங்காத வேலை கொள்வோருக்கு எதிராக ஆணையாளரால் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கை என்ன?
தொழில் தருனர் தொழிலாளிக்கு சம்பளம் கொடுக்கவில்லை என நிரூபிக்கப்பட்டால் சம்பள ஏடு பேணப்படாத சந்தர்ப்பம் அல்லது பரிசீலனைக்காக முன்வைக்காதபோது. எழுத்து மூலமும் சாட்சிகளின் வாக்குமூல ஆதாரங்களுடனும் வழங்கப்படாத சம்பளத்தை அறவிடுவதற்கு தொழில் ஆணையாளருக்கு முடியும்.
ஏதாவது குறித்துரைக்கப்பட்ட தொழிலுக்கு சம்பளச் சபை ஒன்றினை அமைத்தல் வேண்டும் என்ற கோரிக்கையின் பெயரில் சம்பளச் சபைகள் அமைப்பதற்கான ஆணை யாரால் பிறப்பிக்கப்படும்?
தொழில் அமைச்சர் அவர்களினால் ஆணை பிறப்பிக்கப்படும்.
சம்பளச்சபை ஒன்றில் அங்கம் வகிப்பவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடுக?
சம்பளச்சபை முக்கூட்டமைப்பின் பிரதிநிதித்துவ முறையில் அமைக்கப்படும். அதாவது உரிய தொழிலாளர் (Employee) சார்பில் 07 பேர்களும், தொழில் தருனர் (Employer) சார்பில் 07 பேர்களும், அரச பிரதிநிதிகளும் அடங்குவர்.
சம்பளச்சபை ஒன்றினால் எடுக்கப்படும் தீர்மானம் எவ்வாறு சட்டபூர்வமாக்கப்படும்?
சம்பள சபையினால் காலத்திற்குக் காலம் எடுக்கப்படும் தீர்மானமானது. அரச வர்த்தமானியிலும் புதினப் பத்திரிகைகளிலும் மூன்று மொழிகளில் அறிவித்து அதற்கு திரும்பவும் சம்பள நிர்ணய சபையினால் எடுக்கப்படும் இறுதித் தீர்மானம். கௌரவ அமைச்சர் அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்று மீண்டும் அரச வர்த்தமானியிலும், புதினப் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டு, சட்டபூர்வமாக்கப்படும்.
சம்பள நிர்ணய சபை ஒன்றினால் தீர்மானிக்கப்படும் விடயங்கள் எவை?
- தொழில் அல்லது சேவையினை அறிமுகம் செய்தல்
- உரிய தொழில் அல்லது சேவையிலுள்ள வெவ்வேறு சேவை வகுப்பினருக்கு சம்பளக் கொடுப்பனவுகளை நிர்ணயித்தல்.
- கடமை செய்ய வேண்டிய மணித்தியாலங்களின் எண்ணிக்கை. (Duty Hours)
- கிழமையொன்றுக்கான பகுதிநேர விடுமுறை நாளும், முழுநாள் விடுமுறை நாளும்.
- மேலதிக நேர வேலைக்கான கொடுப்பனவு
- கிழமை விடுமுறைகளில் கடமை செய்யும்போது கொடுப்பனவுகள்
- பொது விடுமுறைகளும் அத் தினங்களில் கடமை செய்தால் அதற்கான கொடுப்பனவுகள்
சம்பள சபை ஒன்றினை நிறுவியிருந்தும் ஒரு ஆண்டு காலத்தினுள் எதுவித தீர்மானம் ஒன்றையும் எடுக்காத பட்சத்தில் குறைந்தபட்ச சம்பளம் யாரால் தீர்மானிக்கப்படும்?
குறைந்தபட்ச சம்பளத்தினைத் தீர்மானிப்பதற்கு கௌரவ தொழில் அமைச்சரினால், ஆணையாளருக்கு (Commissioner) அதிகாரம் வழங்க முடியும்.
சம்பளச் சபைகள் அமைக்கப்பட்டுள்ள பெருந்தோட்டத் தொழில்கள் எவை?
1) தேயிலை உற்பத்தி
2) கொக்கோ உற்பத்தி
3) இறப்பர் உற்பத்தி
4) தென்னை தொழில்
சம்பளச் சபைகள் அமைக்கப்பட்டுள்ள உற்பத்தித் தொழில்கள் பத்தினை குறிப்பிடுக
- இயந்திரவியல் தொழில்
- அச்சுப்பதிப்பு தொழில்
- தேயிலை ஏற்றுமதி
- இறப்பர் ஏற்றுமதி
- மதுபான உற்பத்தி
- தீப்பெட்டி உற்பத்தி
- தெங்குப் உற்பத்தி
- கட்டிடத் தொழில்
- ஒடு, செங்கல் உற்பத்தி
- ஆடை தயாரிப்பு
சம்பளச் சபைகள் அமைக்கப்பட்டுள்ள சேவை வழங்கும் தொழில்கள் எவை?
- மோட்டார் வாகன போக்குவரத்து (Motor Vehicle Transport)
- மருத்துவ விடுதி (Medical Hostel)
- ஹோட்டல்கள் (Hotels)
- பாதுகாப்புச் சேவைகள் (Security Service)
- பத்திரிகையாளர் தொழில் ‘(Media)
- சில்லறை, மொத்த வியாபாரம் (Small Business)
தொழில் ஆணையாளர் நாயகத்தின் தீர்மானங்கள் மூலமான தொழில்கள் எவை?
- பத்தி உற்பத்தி
- கண்ணாடி உற்பத்தி
- சுத்திகரிப்பு வேலை
- ஆரம்பப் பாடசாலை சேவை
தொழிலாளர்கள் தொடர்பில் தொழில் தருநரின் பொறுப்புக்கள் எவை?
- தனது தொழிலாளர்களுக்கு உரிய நாளில் சம்பளம் வழங்குதல் வேண்டும்.
- ஆகக்குறைந்த சம்பளத்துக்குக் குறையாத சம்பளத்தை வழங்குதல்
- சம்பளத்தில் அறவிடக்கூடிய அளவினை மட்டும் அறவிடல்
- சம்பள சபைத் தீர்மானங்களுக்கேற்ப தொழிலாளர்களின் கொடுப்பனவு ஏடுகளை வைத்திருத்தல் வேண்டும்.
- தொழிலாளர்களுக்கு, சட்டப்படியான விடுமுறைகளை வழங்குதல்
- சம்பளச் சபை ஒன்றில் அங்கத்தவரான தொழிலாளிக்கு கடமை லீவு வழங்கல் வேண்டும்.
தொழில் தருனர் தொடர்பில் தொழிலாளர்களின் பொறுப்புக்கள் எவை?
- தொழில்தருநரின் சட்டப்படியான உத்தரவுகளை கடைப்பிடித்தல் வேண்டும்.
- கடமைக்கு தொடர்ந்து வர வேண்டும்
- வேலை நேரத்தின் போது மது அருந்துவதைத் தவிர்த்து, நிறுவனத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தாமல், கடமையாற்றுவது தொழிலாளர்களது பொறுப்பாகும்.
வேலையாட்களுக்கு சம்பளம் செலுத்தாமை, சம்பந்தமாக என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?
நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யமுடியும்,
- உரிய நிலுவையினை தண்டனைப் பணமாக அறவிடுதலுக்கு.
- ஐயாயிரம் ரூபாவுக்குக் குறையாததும், பத்தாயிரம் ரூபாவை விஞ்சாததுமான குற்றப் பணமொன்று தண்டனையாக அறவிடுவதற்கு
- ஒரு வருட சிறைத் தண்டனையை விதிப்பதற்கும்
இதுபோன்ற குற்றங்களுக்காக, தண்டனை வழங்க நீதவான் நீதிமன்றுக்கு அதிகாரம் உண்டு.
தொழிலாளர்களுக்குரிய விடுமுறையை அனுமதிக்காத குற்றத்திற்கு தொழில் தருனருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?
நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரும் சந்தர்ப்பத்தில் ரூபா 5000/-க்கு மேற்படாத குற்றப் பணத்தையோ ஒரு வருடத்திற்கு மேற்படாத சிறைத் தண்டனையையோ அல்லது இரண்டினையுமோ விதிக்க முடியும்.
ஒரு தொழிலாளிக்கு சம்பளச் சபைத் தீர்மானங்களின் படி ஆகக் குறைந்தபட்ச சம்பள வீதம் தீர்மானித்துள்ள போது. அவர் இரண்டு விதமான தொழில்களில் ஈடுபட்டிருப்பின் அவருக்கு சம்பளம் எவ்வாறு வழங்கப்படும்?
அந்தத் தொழில் இரண்டிற்கும் வெவ்வேறான சம்பள அளவு எனில் உரிய தொழில் செய்யும் நேரத்துக்கான அந்தந்த வேலைக்குரிய குறைந்தபட்ச சம்பளத்திற்குக் குறையாத தொகை வழங்குதல் வேண்டும்.
ஒரு தொழிலாளர் வேலைக்காக, வேலை நிலையத்தில் காத்து நிற்கும் சந்தர்ப்பத்தில், அவரது சம்பளம் எவ்வாறு தீர்மானிக்கப்படும்?
தொழில்தருநர், அவருக்கு வேலை வழங்கமுடியாது போகும் பட்சத்தில் (வேறுகாரணங்களுக்காகவே அவர் காத்திருந்தாரென நிரூபிக்க முடியாத போது) உரிய தொழில்தருநரால், அந்தநாள் வேலை செய்ததாகக் கருதப்பட்டு சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
அங்கவீனர்களை, சேவையில் ஈடுபடுத்தும் பட்சத்தில் அதற்கான அனுமதி யாரிடம் பெறப்பட வேண்டும்?
தொழில் ஆணையாளரிடமிருந்து அனுமதியினைப் பெற்று சேவையில் ஈடுபடுத்த முடியும்.
சம்பளச் சபைகளின் தீர்மானங்களுக்கு உள்ளடங்காத தொழில்களின் சம்பள நடவடிக்கைகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும்?
இத்தொழில்கள் சம்பளச் சபை சட்டத்தின் முதலாம் பகுதிக்குள் அடங்கும்.
- அவ்வாறான நிறுவனங்களிலும் சம்பள ஏடுகள் பேணப்படல் வேண்டும்.
- இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்ட அளவு சம்பளத்தினை வழங்க வேண்டும்.
- பரிசீலனைக்காக தொழில் ஆணையாளருக்கு தேவைப்படும் நேரங்களில் ஏடுகளை வழங்குதல் வேண்டும்.
No comments:
Post a Comment