Examination for Promotion of Officers in Class II of Public Management Service Officer Service to Class I – 2008
கடந்தகால வினாப்பத்திரம் விடைகளுடன்
அரச முகாமைத்துவ சேவை (Management Service) தரம் II இலுள்ள அலுவலர்களை தரம் I இற்கு தரமுயர்த்துவதற்கான பரீட்சை வினாப்பத்திர வினாக்களும் விடைகளும்
தாபன நடைமுறைகள்
1) நியமனக் கடிதமொன்றில் (Appointment Letter) உள்ளடங்குகின்ற 10 விடயங்களைச் சுருக்கமாக விபரிக்குக.
- கடித இலக்கம் மற்றும் திகதி
- நியமனம் பெறுபவரின் முழுப்பெயர்,
- நியமிக்கப்படும் திணைக்களத்தின் பெயர்,
- பதவிப்பெயர்
- நியமனத்திகதி
- தகுதிகாண் காலம் தொடர்பான விபரம்
- பதவி ஓய்வூதிய உரித்துடையதா என்பது,
- வேதன அளவுத்திட்டம்,
- சித்தியடைய வேண்டிய இரண்டாம் மொழி தொடர்பான விபரம்,
- வினைத்திறமைகாண் தடை தொடர்பான விபரம்,
- மருத்துவ அறிக்கை தொடர்பான விபரம், Medical Report
- திணைக்களத் தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் தொடர்பான விபரம்,
- புகையிரத ஆணைச்சீட்டு தொடர்பான விபரம்.
2) சுயவிபரக்கோப்பு (Personal File) ஒன்றை நடத்திச் செல்வது திணைக்களத் தலைவருக்கு முக்கியத்துவமாவது ஏனென்பதை விபரிக்குக,
ஒரு உத்தியோகத்தர் புதிய பதவி ஒன்றில் (New Job) சேர்ந்தவுடன் அவரது தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் பெறப்பட்டு திணைக்களத் தலைவரினால் உத்தியோகத்தரின் பெயரில் சுய விபரக்கோப்பு (Personal File) ஆரம்பிக்கப்படுகின்றது.
இதன் மூலம்,
அ) உத்தியோகத்தர் தொடர்பான சுய விபரங்கள் (Personal Details) உடனுக்குடன் அறிய முடியும்,
ஆ) வருடாந்தம் செயலாற்றுகை மதிப்பீடு (Performance Appraisal) செய்வதற்கு இலகுவானது,
இ) உத்தியோகத்தரின் சேவை உறுதிப்படுத்தல்கள் (Conformation) தொடர்பில் பொருத்தமான தகவல்களை இலகுவாக பெறமுடியும்,
ஈ) பதவியுயர்வுகள் (Promotion), சேவைமாற்றங்கள் (Change of Post), இடமாற்றங்கள் (Transfer) தொடர்பான தகவல்கள் பதியப்படுவதால், புதிய திணைக்களத்தலைவர்களும் உத்தியோகத்தர் தொடர்பான வரலாற்றினை இலகுவாக அறிந்து கொள்ள முடியும்,
உ) உத்தியோகத்தருக்கு ஓய்வூதியம் பெற்றுக் கொடுப்பதற்கு அவரது சுயவிபரக்கோவை அவசியமாகின்றது.
3) இரவலாகப் பெற்ற மோட்டார் வாகனமொன்றைப் பாவிப்பது தொடர்பாக தாபனக்கோவை XIV ஆம் அத்தியாத்தில் உள்ள ஏற்பாடுகள் எவை ?
அ) அனுமதிக்கப்பட்ட அலுவலர் ஒருவருக்கு இரவல் கார் (Rental Car) ஒன்றைப் பாவித்து அதற்கான மைல் கூலியைப் பெற்றுக்கொள்ள ஆகக்கூடியது ஒரு வருடத்திற்கு திணைக்களத் தலைவரினாலும், மேலும் ஒரு வருடத்துக்கு செயலாளரினாலும் அனுமதிக்கப்பட முடியும்.
எனினும் அவரது சொந்தக் கார் பழுது பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது (Car Repairing) அல்லது அவரது நியமனத் தேதியிலிருந்து அவர் ஒரு காரைக் கொள்வனவு (Purchasing a Car) செய்யும் வரை மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படும்.
ஆ) சில வேளைகளில் மாத்திரம் கடமை பிரயாணம் (Travelling for Duty) செய்ய வேண்டியவரான அலுவலர் ஒருவருக்கும் இவ்வாறு மைல் கூலியைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கலாம்.
இ) மைல் கூலியை வழங்க வேண்டியது அவ்விரவல் வாகனத்திற்குரிய கட்டணத்தொகை மற்றும் அவரின் சொந்தக் காரின் கட்டணத்தொகை ஆகிய இவ்விரண்டில் குறைந்த தொகை எதுவோ அத்தொகையாகும்.
ஈ) அலுவலர் காரொன்றைச் சொந்தமாக வைத்திருக்காவிட்டால், இரவல் காருக்கான மைல்கூலி வழங்கப்பட வேண்டியது 8:2 ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட கட்டணத்தொகைக்கு அமையவேயாகும்.
4) சேவை செய்யுமிடத்திலிருந்து குறுகிய கால முன்னறிவுப்புடன் இடமாற்றம் செய்தமையின் பொருட்டு அலுவலர் ஒருவர் பெற்றுக்கொள்ளக்கூடிய கொடுப்பனவுகள் பற்றி விபரிக்குக.
சரிசெய்கைப் படி:
அலுவலர் ஒருவர், ஒரு மாதத்துக்குக் குறைவான கால அவகாசத்துடன் இடமாற்றம் செய்யப்பட்டால் தனக்குரிய இணைந்தபடியில் 50% ஆன சரிசெய்கைப் படியொன்றைப் அவர் பெறமுடியும்.
30 நாட்களுக்குக் குறைவான கால அவகாசத்துடன் இடமாற்றம் செய்யப்படும் போது அந்த 30 நாள் காலக்கெடு நிறைவடைவதற்குக் குறைவாகவுள்ள தினங்களுக்கு மாத்திரமே இச்சரிசெய்கைப்படி வழங்கப்படும்.
இதன் போது கணக்கிட வேண்டிய திகதிகள் இடமாற்ற அறிவித்தலில் குறிப்பிட்ட திகதியும் புதிய நிலையத்தில் கடமைகளைப் பொறுப்பேற்கும் திகதியும் ஆகும்.
மற்றும் ஆகக்கூடியது ஒரு மாதம் வரை இணைந்தபடியின் 25% மேலதிக நிதியைக் கொடுப்பனவு செய்ய முடியும்.
5) விடுமுறைகால புகையிரத ஆணைப்பத்திரம் வழங்குவது தொடர்பாக தாபனக் கோவையிலுள்ள ஏற்பாடுகளின் துணையுடன் கீழ்வரும் விடயங்கள் தொடர்பாக விடை எழுதுக.
(1) அலுவலர் விவாகம் ஆகாதவர் எனில்,
அலுவலரின் கீழ் உண்மையாகவே தங்கி வாழ்கின்ற தாய்/ தந்தை மற்றும்/ அல்லது சகோதரன்/ சகோதரி ஆகியோருக்கு ஆணைச்சீட்டுக்கள் வழங்கப்படும்.
ஒரு குடும்பத்தில் விவாகமாகாத இரண்டு உத்தியோகத்தர்கள் இருப்பின் ஒருவருக்கு மாத்திரமே இச்சலுகை வழங்கப்படும்.
(ii) கணவன் மனைவி இருவருமே அரசாங்க சேவையில் ஈடுபட்டுள்ளவர்களாயின்,
கணவன், மனைவி ஆகிய இருவரும் ஆணைச்சீட்டினைப் பெற முடியுமெனின், உத்தியோகத்தரின் வாழ்க்கைத் துணை என்ற அடிப்படையில் ஒருவர் மூலமாக ஆணைச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்கு விருப்பம் தெரிவிக்க முடியும்.
இவ்வாறான விருப்பம் ஒரு நிதியாண்டின் தொடக்கத்திலேயே தெரிவிக்கப்பட வேண்டும்.
(iii) அரசாங்க சேவையிலிருந்த அலுவலர் ஒருவர் ஓய்வு பெற்றிருப்பின்
ஓய்வு பெற்ற ஒருவருக்கும் அவரது முழுக் குடும்ப உறுப்பினர்களுக்கும் இருவழிப் பயண ஆணைச்சீட்டுக்கள் மூன்று (அதாவது மூன்று சோடிகள்)
(25/2017 சுற்றுநிருபம்)
6) முறைசார் ஒழுக்க விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்ட அலுவலருக்குத் தரப்படும் முறைப்பாட்டுப் பத்திரத்தில் இருக்கவேண்டிய அடிப்படை விடயங்கள் எவையென எடுத்துக் காட்டுக.
i) குற்றஞ்சாட்டப்பட்ட அலுவலருக்கு எதிராக வழங்கப்படும் குற்றப்பத்திரம் இவ்விதிக்கோவையின் எவ் அத்தியாயத்தின் எந்தப்பிரிவின் அல்லது கீழ் அமைகின்றது என்றும்,
ii) சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் இவ்விதிக்கோவையின் எந்த அட்டவணையின் கீழ் உள்ளடங்குகின்றன எனவும்,
iii) குற்றப்பத்திரத்திற்கு விடையளிப்பதற்காக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அலுவலருக்கு எவ்வளவு கால அவகாசம் வழங்கப்படும் என்பதையும்,
iv) குற்றப்பத்திரத்திற்கான விடைகள் யாரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதையும்,
v) சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் யாதென்பதையும்,
vi) குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்காக நடாத்தப்படும் ஒழுக்காற்று விசாரணையின் போது அழைக்கவிருக்கும் சாட்சியாளர்ளின் பெயர்கள், பதவிகள் தற்போது சேவையாற்றும் இடங்கள் முதலிய விபரங்களும்,
vii) ஒழுக்காற்று விசாரணையில் குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கவுள்ள சாட்சியாளர்களின் வாக்குமூலங்கள் ஆவணங்கள் பற்றிய விபரங்களும்,
viii) சாட்சியங்கள் உள்ளடங்கிய ஆவணங்கள் யாருடைய பொறுப்பில் உள்ளனவென்றும் அலுவலர் தனியாகவோ அல்லது அவரது எதிர்க்காப்பு அலுவலருடனோ அவற்றை பார்வையிடக்கூடிய இடமும் பார்வையிடும் முறையும்
ix) குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அலுவலர் சார்பில் தோற்றுவதற்காக எதிர்க்காப்பு அலுவலர் ஒருவரை நியமித்துக் கொள்வதற்கு அவருக்கு உரிமை உள்ளதென்பதையும்,
x) குறிப்பிட்ட கால வரையறையில் குற்றப்பத்திரத்திற்கு விடையளிக்க தவறினால் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும்,
முறைப்பாட்டுப் பத்திரம் கொண்டிருக்கும்.
No comments:
Post a Comment