சகல அதிகாரங்களையும் கொண்ட ஒரு நிறுவன அமைப்பாக விளங்கும் பாராளுமன்றத்தின் பிரதிநிதிகள் யாரால் தெரிவு செய்யப்படுகின்றனர்?
மக்களால்
சட்டங்களை ஆக்கி நாட்டை பரிபாலிக்கும் பொறுப்பு எந் நிறுவனத்தை சார்ந்தது?
பாராளுமன்றம்
பகிரங்கநிதியைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் யாரிடம் உள்ளது?
பாராளுமன்றத்திடம்.
பகிரங்க நிதி தொடர்பாக இலங்கை சோஷலிச ஐனநாயக குடியரசின் அரசியல் யாப்பின் 148வது பிரிவு கூறும் விடயம் என்ன?
பாராளுமன்றமானது பகிரங்க நிதியின் முழுக்கட்டுப்பாட்டையும் கொண்டுள்ளது எனக் கூறுகிறது.
பகிரங்க நிதி தொடர்பாக பாராளுமன்றத்தால் எந்த ஒரு நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்படும் போது கருத்திற் கொள்ள வேண்டிய உபாயங்களைக் குறிப்பிடுக.
அ) நிதியை ஏற்படுத்தல்,
ஆ) காலப்பகுதியை தீர்மானித்தல்.
இ) உயர் எல்லையை தீர்மானித்தல்.
ஈ) அறவீடு அல்லது செலவு செய்யும் நோக்கங்களை இனங்காணல்
உ) செலவு செய்யும் விடயங்களை இனங்காணல்.
இத்தகைய செயற்பாடுகளை செய்யும் வகையில் அரசியல் அமைப்பில் பின்வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திரட்டு நிதி
சட்டத்தால் வேறுவிஷேட நோக்கங்களுக்கென்று குறித்தொதுக்கப்படாத, (உ-ம்) அரசியல் யாப்பில் 151 (1) பிரிவின் படியான எதிர்பாராத செலவுநிதி, அரசின் எல்லா நிதிகளும் ”திரட்டு நிதி” எனும் நிதிக்குரியதாகும்.
விஷேட நோக்கத்திற்கல்லாத மற்றெல்லா பெறுவனவுகளும், வருமானங்களும் இத்திட்டு நிதிக்கு வரவு வைக்கப்படும்.
அத்தோடல்லாது அரச கடன்களை தீர்ப்பது உட்பட்ட பாராளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும் எல்லா செவினங்களும் திரட்டு நிதியிலிருந்தே கொடுப்பனவு செய்யப்படும்.
திரட்டு நிதியிலிருந்து நிதியைப் பெறல் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?
1). திரட்டு நிதியிலிருந்து குறித்தவொரு ஆண்டிற்கான அரசின் நடவடிக்கைகளின் பொருட்டான செலவினங்களுக்கான நிதியை பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படட்டதன் பிரகாரம் அல்லது வேறு அதிகாரத்தின் பிரகாரம் நிதி அமைச்சர் கைப்பட கையெழுத்திடப்பட்ட ஆணைப்பத்திரத்தை Warrant வழங்குவதன் மூலம் திரட்டு நிதியிலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
2) ஒதுக்கீட்டு அதிகாரச் சட்டத்தை ஆக்குமுன் பாராளுமன்றம், கலைக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில், புதிய பாராளுமன்றம் கூடியதிலிருந்து இரண்டுமாதம் வரைக்குமான அரசின் செலவினங்களுக்கான நிதியினை திரட்டு நிதியிலிருந்து பெறுவற்கான அதிகாரம் குடியரசின் அதிஉத்தம ஜனாதிபதியால் வழங்கப்படும்.
3) ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்படும், சந்தர்ப்பங்களில் அதன் பொருட்டான தேர்தல் திகதி குறித்த விடத்து, தேர்தல் தொடர்பான செலவுகளின் பொருட்டு பாராளுமன்றத்தால் முன்னரே நிதி ஒதுக்கப்படாவிட்டால், தேர்தல் நடாத்துவதற்கான நிதியை திரட்டு நிதியிலிருந்து பெறுவதற்கான அதிகாரம் ஜனாதிபதியால் வழங்கப்படும். (அரசியல் யாப்பு 130 (4) )
4) எதிர்பாரததும், அவசரமுமான செலவினங்களுக்கு எதிர்பாராச் செலவு நிதியை ஸ்தாபிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திடமுள்ளது. எதிர்பாராத அவசர செலவை மேற் கொள்ள வேண்டியிருப்பின் அதன் பொருட்டு ஏற்பாடு ஏதும் செய்யப்படாதவிடத்து மேன்மைதங்கிய ஜனாதிபதியின் ஒப்புதலுடன் எதிர்பாராத செலவு நிதியிலிருந்து முற்பணத்தைப் Advance பெற்றுத் தருவதற்கும். அதனைத் தொடர்ந்து குறை நிரப்பு வரவு செலவுத் திட்டமூலம் பாராளுமன்றத்தின் அதிகாரத்தைப் பெற்று மேற்கூறிய முற்பணத்தை தீர்த்துக் கொள்வதற்கும் நிதி அமைச்சருக்கு அதிகாரம் உண்டு . (அரசியல் யாப்பு) 151 (2)
5) திரட்டு நிதி தொடர்பான பெறுவனவுகள், கொடுப்பனவுகள் சம்பந்தப்பட்ட நிதிச்சட்டங்கள் யாவும் அமைச்சரவையின் அனுமதியுடன் சம்பந்தப்பட்ட அமைச்சரால் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும். (அரசியல்யாப்பு 152)
நிகழும் பொழுதான கட்டுப்பாடு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?
அனுமதியளிக்கப்பட்ட அரச நிதி நடவடிக்கைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கும் பொழுது இது சம்பந்தமாக பாராளுமன்றத்தால் நேரடியான கட்டுப்பாட்டை வைத்திருக்க முடியாது.
எனிலும் நிதி அமைச்சராலும் அவரின் கீழ் இயங்கி வரும் திறைசேரியினாலும் நிகழும் பொழுதான கட்டுப்பாடு உறுதி செய்யப்படுகின்றது.
திறைசேரியினால் நிகழும் பொழுதான கட்டுபாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?
1) கணக்கீட்டு உத்தியோகத்தார்களுக்கு அறிவுரை கூறல்,
2) புத்தகங்களிலிருந்து பதிலளித்தலுக்கான அலுவலர்களை நியமித்தல் போன்ற விடயங்களுக்கான அதிகாரத்தையும், அனுமதியையும் வழங்குதல்,
3) கட்டுநிதியை வழங்கல்
4) கணக்குகளைப் பேணல்,
5) திணைக்களங்களின் கணக்குகளை மேற்பார்வை செய்தல்
போன்ற நடவடிக்கைகளால் நிகழும் பொழுதான கட்டுப்பாட்டை உறுதி செய்கின்றது.
மற்றும் ஒவ்வொரு செலவினத்தலைப்புகளின் கணக்கீட்டு பொறுப்பை ஒவ்வொரு திணைக்களத் தலைவருக்கும் அதற்குப்பொறுப்பான அமைச்சின் செயளாளருக்கும் கையளித்தலுடன் அவர்கள் முறையே கணக்கீட்டு, பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தார்களாக நிதி அமைச்சரால் நிதிமிக்கப்படுவதன் மூலம் மேலும் இது உறுதி செய்யப்படுகிறது.
கணக்கீட்டு உத்தியோகத்தரும், பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரும் முறையே தமது திணைக்களங்களினதும் அமைச்சுக்களினதும் நிதி சம்பந்தமான கட்டுப்பாடுகளை, திறைசேரி காலத்துக்குக்காலம் வழங்கும் உயர் அறிவுரைகளுக்கும், நிதிப்பிரமாணங்களுக்கும் ஏற்ப செய்து வருவதோடு அது சம்பந்தமான பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.
பிரதான கணக்குப் பொறுப்பு உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை குறிப்பிடுக.
அமைச்சின் செயலாளர் தனது சொந்தக் கடமைகளுடன் பிரதான கணக்குப் பொறுப்பு உத்தியோகத்தராகவும் கடமையாற்றுவார். இதன் பொருட்டு அவருக்கு மேலதிகக் கொடுப்பனவு எதுவும் வழங்கப்படமாட்டாது. பொதுவாக இவரது கடமைகள் (நி.பி.127)
அ. நிதி கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள திணைக்களங்களில் நடைபெற்று வரும் வேலைத்திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுதல்.
ஆ. தனது திணைக்களத்தின் நடவடிக்கை திறமையாக நடைபெறுகிறதா என உறுதி செய்து கொள்ளல்.
இ. ஒதுக்கீட்டுக் கணக்குகள் சரிவரத்தயாரிக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றதா என்பதை உறுதிசெய்தல்.
ஈ. திணைகளங்களின் வருமானம், செலவினம் சம்பந்தமாக மிக அவதானத்துடன் செயற்படல்.
உ. பகிரங்க கணக்குக் குழுமுன் தோற்றல்.
கணக்குப் பொறுப்பு உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளை குறிப்பிடுக.
விஷேட சந்தர்ப்பங்களைத் தவிர்ந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் திணைக்களத் தலைவரே கணக்குப்பொறுப்பு உத்தியோகத்தராக நியமிக்கப்படுவார். (நி.பி. 125: 128)
அ. திணைக்களத்தில் நோக்கத்தை அடைவதற்கான திட்டங்களைத் தயாரித்தல்.
ஆ. திணைக்களங்களின் கணக்குப் பேணும் நடைமுறைகள் போதுமானதா என உறுதி செய்தல்.
இ. அரசின் சட்டத்திட்டங்கள் திணைக்களத்தால் சரிவர கடைப்பிடிக்கப்படுகிறதா என உறுதிசெய்தல்
ஈ. கணக்கு வைக்கும் முறைமையில் உள்ளகக் கணக்காய்வுக்கு இடமளிக்கப்பட்டு இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளல்,
உ) திணைக்களத்திற்கு சொந்தமான சொத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றதா,
ஊ) தேவையான அறிக்கைகள் உரிய நேரத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றதா,
எ) அறவிடப்பட வேண்டி பணம் தொடர்பான அறிக்கைகள் சரிவரப்பேணப் படுகின்றதா என உறுதி செய்தல்.
ஏ. வருடாந்த ஒதுக்கீட்டுக் கணக்குகளை தயாரித்தளித்தல் என்பன இவரின் கடமையாகும்.
பொது நிதி தொடர்பிலான நடவடிக்கை முடிந்தப்பின் கட்டுப்பாடு எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது?
பாராளுமன்றத்தால் அதிகாரமளிக்கப்பட்டதன் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட வருமான சேகரிப்புக்களும், செலவினங்களும் பொறுப்பான நிறைவேற்று உத்தியோகத்ததர்களால் சரிவரச் செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ளலும் அது தொடர்பில் ஏதாவது குறைபாடுகள் அவதானிக்கப்பட்டால் அவற்றை சரிசெய்து கொள்ளும் வழிவகைகளைக் கண்டறிதலுமே இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
கணக்குப் பொறுப்பு உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களை சமர்ப்பிக்கப்பட்ட நிதி அறிக்கைகள் மூலம் பரீட்சித்துப்பார்த்து புலனாகின்ற விடயங்களை ஆய்வு செய்தல் அவசியமாகின்றது.
இச்செயற்பாட்டினை பாராளுமன்றம், கணக்காய்வாளர் நாயகம் மூலமும், பகிரங்கக் கணக்குக்குழு மூலமும் நிறைவேற்றுகின்றது.
இதன்போது உத்தியோகத்தரொருவரது கவனமின்மையாலோ. வினைத்திறமைக் குறைவினாலோ பொது நிதியில் விரயமோ, நட்டமோ ஏற்பட்டிருப்பின் அவரிடமிருந்தே அத்தொகை அறவிடப்பட வேண்டுமென்று பாராளுமன்றத்திற்கு விதந்துரைப்பதற்கு பகிரங்கக் கணக்குக் குழுவுக்கு அதிகாரமுள்ளது.
அவ்வாறல்லாதவிடத்து குறைபாடுகளை தவிர்த்துக் கொள்வதன் பொருட்டு அரச திணைக்களங்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய மேலதிக கட்டுப்பாட்டு முறைமைகள் யாதென திறைசேரி மூலம் திணைக்களங்களுக்கு அறிவுறுத்தும் அதிகாரத்தையும் பகிரங்கக் கணக்குக் குழு கொண்டுள்ளது.
அரசாங்கக் கணக்கு தொடர்பிலான பொதுத்துறையானது தன்னகத்தே கொண்டுள்ள அமைப்புகளை குறிப்பிடுக.
1) அமைச்சுகளும், திணைக்களங்களும்,
2) கணக்காய்வாளர் நாயகத்தின் அலுவலகம்.
3) மாகாண சபை.
4) பிரதேச செயலகங்கள்.
5) சட்டயாக்கங்கள். (மேற்குறிப்பிடப்படாத பொது நிறுவனங்கள்)
அரச நிதியுடன் தொடர்புடைய அமைப்புக்களின் கணக்கியல் முறைகளும் செயற்பாடுகளும் எந்த சட்டங்களில் தங்கியுள்ளன?
அ) 1978ம் ஆண்டு அ சியல் யாப்பு.
ஆ) 1978ம் ஆண்டு நிதிச்சட்டம்.
இ) வருடாந்த ஒதுக்கீட்டு அதிகாரச்சட்டம்.
ஈ) நிதிப்பிரமாணங்கள்.
அரசியல் யாப்பானது எவற்றை வலியுறுத்துகிறது?
அ) அரசியல் யாப்பானது பொது நிதியை பாராளுமன்றம் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆகக்குறைந்த ஏற்பாடுகளைக் குறித்து நிற்கிறது.
ஆ) அது திரட்டு நிதியை அமைக்க வழிவகை செய்வதுடன் அரசின் வருமானங்கள் யாவற்றையும், சட்டத்தால் வேறொன்றுக்கென்று குறித்தொதுக்கப்படாத விடத்து திரட்டு நிதிக்கே வரவு வைக்கப்படல் வேண்டுமென்றும், செலவினங்கள் யாவும் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட, வருடாந்த ஒதுக்கீட்டு சட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு நிதி அமைச்சரால் ஆணைப்பத்திரம் வழங்கப்பட்ட பின்னரே மேற்கொள்ளப்படல் வேண்டுமென்றும் வற்புறுத்துகின்றது.
இ) மேலும் அரசியல் யாப்பானது சுயமான கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிக்க வழிவகை செய்வதுடன் பகிரங்க கணக்குகளையும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளையும் கணக்காய்வு செய்யப்படல் வேண்டுமெனவும் வலியுறுத்தி நிற்கின்றது.
பிரதேச செயலகங்கள் எந்தச்சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்ட்டன?
1992ம் ஆண்டு அதிகாரமாற்றல் (பிரதேச செயலகங்கள்) சட்டத்தின் மூலம் பிரதேச செயலகங்கள் ஸ்தாபிக்கப்ட்டன. பிரதேச செயலகங்கள் மத்திய அரசுடன் ஆகக்குறைந்த தொடர்பை உடையதாகவும், பொது மக்கள் அரசுடன் தொடர்பு கொள்ளக் கூடிய தொடுப்பாகவும் அமைந்து காணப்படுகின்றது. அரசியல் யாப்புக்கான 13ம் திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட மாகாண சபைகளுக்கும் இவை பொறுப்பு உடையதாகும்.
பிரதேச செயலகங்கள் எந்த நோக்கங்களுக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ளன?
அ) மக்களின் தேவைகளுக்கேற்ப உள்ளூர் மட்டத்தில் சேவைகளை வழங்குவது.
ஆ) பிரதேச மட்டத்தில் தேசிய மாகாண கொள்கைகளையும் திட்டங்களையும் செயற் திட்டங்களையும், கருத்திட்டங்களையும் செயற்படுத்துவது.
ஒவ்வொரு பிரதேசசெயலகமும் ஒரு பிரதேச செயலாளரால் தலைமை வகிக்கப்படுகின்றது. கணக்கீட்டு முறைமைக்கு இலங்கை கணக்காளர் சேவையைச் சேர்ந்த கணக்காளர் பொறுப்புடையவராவார். கணக்காளர் மத்திய அரசாங்கத்தைச் சேர்ந்த அலுவலராகவும் இருப்பார்.
பிரதேச செயலகங்கள் திறைசேரியால் வழங்கப்பட்ட நிதிப்பிரமாணங்களையே பயன்படுத்தப்படுகின்றன.
என்ன காரணங்களுக்காக நிதிக்கட்டுப்பாடானது மிக முக்கியமானதாக அமைகின்றது?
1) திட்டமிடல் வட்டத்தில் இது முக்கிய தொடுப்பாக அமைந்து நடப்பு வருடத்தில் கட்டுப்பாட்டை அதிகரிப்பதுடன் (உ-ம் செலவின முகாமை, வளங்களின் மீளளிப்பு) எதிர்கால வள ஓதுக்கீட்டு தீர்மானங்களுக்கு தேவையான நல்ல தகவல்களையும் வழங்குகின்றது.
2) நன்றாக வடிவமைக்கப்பட்ட அறிக்கையிடும் முறைமையானது அரசாங்க உத்தியோகத்தரினதும் பாராளுமன்ற பிரதிநிதிகளினதும் கணக்கிறுப்புத்தன்மையை அதிகரிக்கின்றது.
3) பெறுவனவுகளை முறையாக கண்காணிப்பின் அது சேகரிக்கும் வீதத்தை அதிகரிக்கச் செய்கின்றது.
4) உள்ளூர் வளங்களின் செயற்பாட்டை அதிகரிக்கின்றது.
5) நன்கு உருவாக்கப்பட்ட முறைமையானது மோசடிகளுக்கான சந்தர்ப்பத்தை குறைப்பதுடன் உள்நாட்டு வளங்கள் கிடைக்குமாற்றை அதிகரிக்கின்றது.
6) கணக்குக் கூற்றுகளுக்கும், பதிவுகளுக்கும் தேவையான சட்ட பிரமாணங்களின் படி நடந்து கொள்ள வழிவகுக்கின்றது.
தேசிய பாதீட்டுத் திணைக்களத்தின் தொழிற்பாடுகள் எவை?
அரசின் திட்டங்களுக்கும் கருத்திட்டங்களுக்கும் வளங்களை பகிர்ந்தளிப்பதும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் தேசிய வரவு செலவுத் திட்டத்துக்காகன வருடாந்த செலவின மதிப்பீடுகளைத் தயாரிப்பதும் இத்திணைக்களத்தின் பிரதான நோக்கமாகும். அதன் தொழிற்பாடுகள்:
1. தேசிய வரவு செலவுத்திட்டத்தையும் ஏனைய ஒதுக்கீட்டு நடவடிக்கைகளையும் செயற்படுத்துவதும் கட்டுப்படுத்துவதும்.
2. நிதி ஆணைச்சீட்டையும் ஏனைய அதிகாரங்களை வழங்குவதும் செலவினங்களுக்கு நிதியை விடுவித்தலும்
3. அரசின் திட்டங்களினதும் கருத்திட்டங்களினதும் செயற்பாட்டினை மேற்பார்வை செய்தல்,
4. அரசின் திரட்டு நிதி, ஏனைய நிதிகள் தொடர்பான செலவினங்களை கட்டுப்படுத்தல்,
5. திணைக்கள ஆளணி, சம்பள அளவுகள் கொடுப்பனவு வீதம் என்பவற்றின் மீதான கட்டுபாடு,
6. தேசிய வரவு செலவுத்திட்டத்தின் செயற்பாடுகளின் திட்டங்களினதும் கருத்திட்டங்களினதும் செலவு மதிப்பீடுகளை பரீட்சித்தலும் அங்கீகரித்தலும்.
7. அடுத்த வருடத்திற்கான வரைபு மதிப்பீடுகளை தயாரிக்க ஏதுவாக அமைச்சுகளினதும் திணைக்களங்களினதும் நடைமுறைச் செலவினங்களுக்கான வளங்களை வழங்குதல்,
8. செலவின பிரேரணைகளை ஆய்தலும், அமைச்சுகளினதும் திணைக்களங்களினதும் மூலதன நடைமுறை திட்டங்களை தீர்மானித்தலும்
9. வருமான செலவின மதிப்பீடுகளை ஒன்று சேர்த்தல்
10. மூலதன வருமான செலவினங்களுக்கான குறைநிரப்பு மதிப்பீடுகளை கையாள்தல்.
11. ஒதுக்கீட்டு அதிகார சட்டம் தொடர்பில் பொது ஆணைச்சீட்டுகளையும், விசேட ஆணைச் சீட்டுகளையும் வழங்கல்.
12. நடைமுறை மூலதனமான நிதி மாற்றீடுகளை அங்கீகரித்தல்.
13. விசேட கூட்ட விடயங்களை கவனித்தல்
14. பொது நிறுவனங்களினால் கோரப்படும் பாதீட்டு உதவிக் கோரல்களை ஆய்வு செய்தல்,
15. மேற்கூறிய நடவடிக்கைகள் சம்பந்தமான அமைச்சரவை விஞ்ஞாபனங்களை பரீட்சித்தல்.
16. எதிர்பாராத செலவு நிதியிலிருந்து நிதியை விடுவித்தல்
அரசகணக்குகள் திணைக்களத்தின் தொழிற்பாடுகள் எவை?
அரசின் வருமான செலவினங்களை பாதீட்டு அடிப்படையில் கணக்கு வைத்தலும் நிதி அமைச்சின் நிதி சம்பந்தமான அறிக்கையிடும் செயற்பாட்டினை நிறைவேற்றுதலும் அரச கணக்குகள் திணைக்களத்தின் பொறுப்பாகும். திணைக்களத்தின் முக்கிய செயற்பாடுகளாவன:
1. வெளியூர் முகவர்களுடன் நிதிக் கொடுக்கல் வாங்கல்களை வைத்திருத்தல்,
2. வருமான மீளளிப்பு அனுமதித்த செலவினங்களையும் கடன்களையும் கொடுப்பனவு செய்தல்
3. ஆதிக்க அதிகாரத்தை பதிவு செய்தல்
4. கட்டு நிதியும் முற்பணமும்,
5. வைப்புகளும் கொடுப்பனவுகளும் Deposit and Payment
6. அமைச்சு திணைக்களம் கச்சேரி பிரதேச செயலகம் ஆகியவற்றில் கொடுக்கல் வாங்கல்களை கணக்கிற் சேர்த்தல்
7. அரசாங்க கணக்குகளை தயாரித்தலும் பிரசுரித்தலும்
8. ஒதுக்கட்டுக் கணக்குகளை ஒன்று சேர்த்தல்
9. அலுவலக வங்கிக் கணக்குகள் Official Bank account
10. காப்புப் பெட்டியில் பிரதித் தலைப்புகளை பாதுகாத்தல்
11. காசும் வங்கி மீதியும்
12. காசு, முத்திரை சம்பந்தமான கணிப்புச் சபைகளை நியமித்தல்
13. சேமிப்புச் சான்றிதழ் நிதிகள்
14. வெளி நாட்டு உதவு கணக்கீடுகள்
15, அனுமதித்த கழிவுகளுக்குகான அங்கீகாரம்
16. பாதுகாப்பு படையின் ஒய்வூதிய கொடுப்பனவு.
17. அரச பண இழப்பை ஈடு செய்வதற்கான முற்பணங்களை வழங்கல்.
18. பொது ஊழியர் உத்தரவாத நிறுவனத்தில் சட்டரீதியான செயற்படுகள்
19. பொது நிறுவனங்களின் கணக்குகள்
20. காசு முகாமை .
21. முதலீடுகள்
22. பங்குச் சான்றிதழ்களின் பாதுகாப்பு
23. வங்கி உத்தரவாதங்களை வழங்கல்
24. அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் சபைகள் சர்வகலாசாலை ஆகியவற்றிற்கான பண விடுவிப்புகள்.
25. பொதுப்படு கடனின் மூலதன மீள் கொடுப்பனவும் வட்டிக் கொடுப்பனவும்
பகிரங்க நிதி திணைக்களத்தின் தொழிற்பாடுகள் எவை?
1. நிதி கணக்கீட்டு முறைமைகளை அபிவிருத்தி செய்தல்
2. சொத்துக்கள் மாற்றம்
3. கணக்கு முறைமையும் நிதி நடைமுறைகளும்
4. நிதிக் கடப்பாடுகளை கையளித்தல்
5. கேள்வி நடைமுறைகளும் விலகல்களும்
6. ஒப்பந்த, மன ஒப்பந்த கொடுப்பனவுகள்
7. வெளிநாட்டு உள்நாட்டு களஞ்சிய கொள்கைகள்
8. விட்டுவிடுதல்களும் பதிலளித்தல்களும்
9. பரீட்சையும் மேலதிக கட்டணமும்
10. காலவதியான கொடுப்பனவுகளுக்கான அதிகாரம்
11. சொத்து சேதங்களுக்க்கான நட்டவீடுகள்
12. அரச சொத்துக்களின் விற்பனைகள்
13. அரச காப்புறுதி நிதி
14. நன்கொடைகளும் சட்டகட்டணங்களும்
15. அரச ஊரியர்களுக்கான பிணை
16. உள்ளூர் அதிகார சபைகளுக்ளுக்கான முத்திரை வரிக் கொடுப்பனவு
17. வாக்குப்பணச் செலவினம் சம்பந்தமான ஆய்வுகளில் பகிரங்கக் கணக்கு குழுவுக்கும் கணக்காய்வாரளர் நாயகத்துக்கும் உதவுதல்
18. பகிரங்கக் குழுவின் விதப்புரைகளைச் செயற்படுத்தல் ,
19. பகிரங்கக் கணக்குக் குழுவின் கூற்றுகளைப்பரிசோதித்து திறைசேரி அறிக்கையை தயாரித்தல்
20. கணக்காய்வு ஐயவினங்களும், கொடுப்பனவுகளுக்கான காலங்கடந்த அதிகாரம் வழங்கல்
No comments:
Post a Comment